அக்டோபர் 17, 2012

18.10.2012 ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.!




          PTC, MADURAI  இயக்குனரின் வரம்பு மீறிய  செயல்களை கண்டித்து 18.10.2012 அன்று நடைபெறுவதாக இருந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   ஒரு நாள் வேலை நிறுத்ததிருக்கு ஆயத்தமான தோழர் தோழியர்களுக்கு வாழ்த்துக்கள்!

  இது சம்பந்தமான மாநில சங்கத்தின் செய்தி கீழே தரப்பட்டுள்ளது.  


                      அன்புத் தோழர்களே ! வணக்கம்!

நேற்று அறிவித்தபடி, இன்று காலை CPMG, TN  அலுவலகத்தில் JCA  தலைவர்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர் . பேச்சு வார்த்தையில்  முதலிலேயே,தோழர் ஜெயகுமாரின்  தற்கொலை குறித்து  DPS HQRS  அவர்கள் முதல் நிலை விசாரணை  நடத்தியதாகவும்  அதில் PTC யில் அவருடன் தங்கியிருந்த  பயிலாளர்கள் மற்றும் பக்கத்து அறையில் இருந்த பயிலாளர்கள்  விசாரிக்கப்பட்டு வாக்கு மூலம் வாங்கப்பட்டதாகவும்  , அவர்கள் சாட்சியத்தில்  சந்தேகங்களோ அல்லது குற்றச் சாட்டுகளோ எதுவும் கூறப்படவில்லை எனவும் , மேலும் வேறு எந்தவொரு  சாட்சியமோ புகாரோ  பணிப் பயிற்சிக்கு  அவருடன் வந்த பயிலாளர்களிடம்   இருந்து நிர்வாகத்தின் எந்தவொரு பகுதிக்கும் வரவில்லை எனவும் , காவல் துறையின்  அறிக்கையிலும்  இது குறித்து  சந்தேகமான சாட்சியங்கள் எதுவும்  வரவில்லை எனவும் , ஆகவே இது குறித்த அடுத்தகட்ட , இலாக்கா பூர்வமான  ஒழுங்கு நடவடிக்கை  , மற்றும் காவல் துறையில் புகார் கூறுதல் என்ற வரம்புக்குள்  தன்னால் வர இயலாது என்றும்  CHIEF PMG  அவர்கள் உறுதியாக தெரிவித்தார்.இதனினும் மீறிய  உரிய புகார் ஏதேனும்  இருப்பின்  அதன் மீது  சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பது காவல் துறையின்  வேலை என்று  தெரிவித்தார்.  

PTC, MADURAI  இயக்குனரின் வரம்பு மீறிய  செயல்கள் குறித்தும்  DPS  மதுரை அவர்களின்  அடாவடி நடவடிக்கைகள் குறித்தும்  விசாரணை வேண்டும் என்று  கேட்கப்பட்டது .   இது குறித்த புகார்களை தெரிவிக்குமாறு CPMG  அவர்கள் கேட்டார்.  இதற்கு , இதுவரை நம்மிடம் வந்துள்ள புகார்களை நாம் அளித்து விரிவாகப் பேசினோம்  குறிப்பாக , PTC  தோழர்  நாகசுந்தரம் , அம்பை தோழர் முத்துசாமி , பட்டுக்கோட்டை தோழர் ராஜசேகரன், நாகை தோழர் மீனாட்சிசுந்தரம் , மதுரை தோழர்  சிவஞானசுந்தரம் , திருமங்கலம் தோழியர் அமுதா , சென்னை GPO  தோழர் விஜயபாஸ்கர் ,  அம்பை தோழியர்  பகவதி  உள்ளிட்ட ஊழியர்களின் புகார்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று  கடிதங்களும்  விபரங்களும் அளிக்கப் பட்டன. இவர்கள்  சம்பந்தப் பட்ட புகார்கள் மீது உடன்  நடவடிக்கை எடுத்து தீர்க்கப்படும் என்றும் வேறு ஏதேனும் புகார்கள்  அளிக்கப் பட்டாலும்  நிச்சயம் அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் CPMG  உறுதியளித்தார்.  

இத்தனை புகார்களுக்கும் காரணமான PTC  இயக்குனரின்  நடவடிக்கைகளுக்கு  முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்று  கோரினோம். அனைத்து புகார்களும்  உடன் விசாரிக்கப் பட்டு  அதன் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் ,  அகில இந்திய சங்கங்களின் புகார்களும் விசாரிக்கப் பட்டு  அதன் மீது  உரிய   REPORT  மேலே  அனுப்பப் படும் என்று  உறுதியளித்தார் .  மேலும் பயிற்சி மையம்  செல்லும்  தோழிய தோழர்களுக்கு இனி எந்தவொரு  பிரச்சினையும் வரக்கூடாது  என்றும் வேண்டினோம். அதற்கான  உத்திரவும் எழுத்து பூர்வமான  உறுதியும் அளிக்கப்படும் என்றும்  தெரிவித்தார். அதுபோலவே DPS, SR  ம்  PTC  DIRECTOR  உரிய முறையில் அறிவுறுத்தப் படுவார்கள்  என்றும்  தெரிவித்தார். 

இதற்குப் பின்னர்   வேலை நிறுத்தத்தை விலக்கிக்  கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.  இது குறித்து JCA  தலைவர்கள்  ஒன்று கூடி பேசி  முடிவு அறிவிப்பதாக  கூறி  அனைவரும் வெளியே வந்தோம்.  பின்னர் நடைபெற்ற  அனைத்து மாநிலச் செயலர்கள் அடங்கிய JCA  கூட்டத்தில், பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு , பெரும்பான்மை  கருத்து அடிப்படையில் வேலை நிறுத்தத்தினை  ஒத்தி வைப்பது எனவும் , CPMG  அறிக்கை மீது அகில இந்திய சங்கங்களை  மேல் நடவடிக்கைக்கு கோருவது எனவும்  முடிவு எடுக்கப் பட்டது . தற்போது PTC  பணிப்  பயிற்சிக்கு ஊழியர்கள் அச்சமின்றி சென்று வர , தினசரி நடவடிக்கைகளில் ,  நம் கோரிக்கை மீது எழுத்து பூர்வமான   MINUTES  பெறுவது என்றும்   முடிவு எடுக்கப்பட்டது .  அது போலவே CPMG  அவர்களிடம் தெரிவிக்கப் பட்டு  அதன் மீது MINUTES  மாலை பெறப்பட்டது . அதன் நகல் கீழே  அளித்துள்ளோம் . பார்க்கவும் . 

வேலை நிறுத்த அறிவிப்பு என்பது , பிரச்சனைகளை தீர்க்க ஒரு ஆயுதம் , அதுவும் தொழிலாளியின் கடைசி ஆயுதம் . அதனை மாநில அளவிலான   சூழ்நிலைக்கேற்ப , அனைத்து மாநிலச் சங்கங்களின்  கருத்துக்கு  ஏற்ப நாம் கூடுமானவரை  ஊழியர்களைப் பாது காக்க பயன் படுத்தியுள்ளோம். கடந்த நான்கு  ஆண்டுகளாக அதிகார ஆதிக்கம் செலுத்தி வந்த  நிர்வாக அமைப்பை  நம் தொடர்  இயக்கங்கள் , தொழிலாளர் நல ஆணையம்  மூலம்  பெருமளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். நம் பயணம்  இந்த திசை நோக்கி  தொடரும்.  இது முடிவல்ல - ஆரம்பம்.  இது  நமது வெற்றியாகும் .

அனைத்து பகுதி தோழிய / தோழர்களின் , கோட்ட/ கிளைச் செயலர்களின்  முழுமையான ஈடுபாட்டுக்கு  நம் நெஞ்சார்ந்த நன்றி.   பல்வேறு தல மட்ட இயக்கங்களை நடத்திட்ட  அனைத்து பகுதி  இயக்க  வீரர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.  


                     

கருத்துகள் இல்லை: